தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களால் பேசப்பட்டு, அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட (Expunged) கருத்துக்களை வெளியே பயன்படுத்துவது தொடர்பாகவும், சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பது குறித்தும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், “பேரவையில் விவாதத்தின் போது நீக்கப்பட்ட கருத்துக்களை எந்தவொரு வகையில் வெளியில் அல்லது ஊடகங்களில் பயன்படுத்தினாலும், அது சட்டமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாகவே அமையும்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், “விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகளை மீறி அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தியவர்கள் மீது உரிமைமீறல் (Privilege Motion) நடவடிக்கை எடுக்கக் கோரி தமக்குக் கடிதங்கள் வரப்பெற்றுள்ளன. அக்கடிதங்கள் அனைத்தும் தற்போது எனது பரிசீலனையிலும் தீவிர ஆய்விலும் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தின் கண்ணியம், மரபுகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு உறுப்பினர்களும் ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் சபாநாயகரின் இந்த எச்சரிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆய்வின் முடிவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.